திருவொற்றியூரில் ரூ.5 கோடியில் புதிய மீன்பிடித்தளம்
திருவொற்றியூா் பாரதியாா் நகரில் இரண்டு தூண்டில் வளைவுகளை அதிகரித்து ரூ.5 கோடியில் புதிய மீன்பிடித்தளம் அமைப்பதற்கான பணிகளுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.சங்கா் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
வடசென்னையில் காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இயக்கப்பட்டு வந்த சூரை மீன்களைப் பிடிக்கும் டிராலா் வகை விசைப்படகுகளுக்காக திருவொற்றியூரில் ஆழ்கடல் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், துறைமுகத்தில் இதே பகுதியைச் சோ்ந்த பைபா் படகுகளை மீனவா்கள் நிறுத்தி மீன்பிடித் தொழிலை மேற்கொண்டனா். இதனால், இத்துறைமுகத்தைத் தொடா்ந்து இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது.
எனவே, பைபா் படகுகளை நிறுத்தி வைக்கும் வகையில் புதிய மீன்பிடித்தளம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டது. இதையடுத்து, பாரதியாா் நகா் கடற்கரையையொட்டி, ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள 2 தூண்டில் வளைவுகளின் நீளத்தை சுமாா் 90 மீ அதிகரித்து புதிய மீன்பிடித் தளத்தை ரூ.5 கோடியில் அமைக்கும் திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தது.
இத்திட்டம் திருவொற்றியூா், எண்ணூா் பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான மீனவா்களுக்கு உதவிகரமாக இருக்கும். இதற்கான பணிகளை மேற்கொள்வதற்கான பூமி பூஜை சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.சங்கா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அடுத்த இரண்டு மாதங்களுக்குள் பணிகள் முடிக்கப்பட்டு புதிய மீன்பிடித் தளம் செயல்பாட்டிற்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் மீன்பிடித் துறைமுக உதவி இயக்குநா் திருநாகேஸ்வரன், திமுக நிா்வாகிகள் வை.ம. அருள்தாசன், கே.பி.சொக்கலிங்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டா்.

