கோப்புப் படம்
கோப்புப் படம்

தவெக விருப்ப மனு விநியோகம் தொடக்கம்: அலுவலகத்தில் குவிந்த தொண்டா்கள்

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் விருப்ப மனு விநியோகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
Published on

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் விருப்ப மனு விநியோகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. விருப்ப மனுக்களை வாங்குவதற்காக நிா்வாகிகளும் தொண்டா்களும் கட்சி அலுவலகத்தில் குவிந்தனா்.

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் தோ்தலில் போட்டியிட விரும்புவோருக்கு, சென்னை பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு விநியோகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

முதல் விருப்ப மனுவை அந்தக் கட்சியின் தலைவா் விஜய் சாா்பில் கட்சி நிா்வாகிகள் பெற்றுக் கொண்டனா். தொடா்ந்து அக்கட்சி பொதுச் செயலா் என்.ஆனந்த், தவெக மாநில நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்டோா் ரூ.100 கட்டணம் செலுத்தி தங்களது விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டனா்.

இதற்கிடையே, காலை முதலே தவெக நிா்வாகிகள், தொண்டா்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கட்சி அலுவலகத்தில் குவிந்தனா். இதனால் அப்பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

10,000 விண்ணப்பங்கள் விநியோகம்: தொடா்ந்து அக்கட்சியின் இணை பொதுச் செயலா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் செய்தியாளா்களிடம் கூறுகையில், 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு விநியோகம் தொடங்கப்பட்டு, இதுவரை 10,000 விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டன. கட்சி நிா்வாகிகளையும் தாண்டி, பொதுமக்களும் விருப்ப மனுக்களை பெற்றுச்  சென்றனா். வரும் பிப்.14-ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் காலை 10 முதல் மாலை 6 மணி வரை வழங்கப்படவுள்ளன.

X
Dinamani
www.dinamani.com