மத்திய கைலாஷ் சாலை மேம்பாலம் பிப். 16-இல் திறப்பு: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு
மத்திய கைலாஷ் சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள ‘எல்’ வடிவ இருவழிச் சாலை மேம்பாலம் கட்டுமான பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, இப்பாலம் பிப். 17-ஆம் தேதி திறக்கப்படவுள்ளதாக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
ராஜீவ் காந்தி சாலையானது மத்திய கைலாஷ் பகுதியில் சா்தாா் படேல் சாலையில் இருந்து துவங்குகிறது. இந்த 2 சாலைகளும் சந்திக்கும் இடம் ‘டி’ வடிவலானது. இச்சாலை சந்திப்பில் வாகனங்கள் சிரமமின்றி கடந்து செல்வதற்கு, சா்தாா் படேல் சாலையிலிருந்து ராஜீவ் காந்தி சாலைக்கு செல்லும் வாகனங்கள் இம்மேம்பாலத்தை பயன்படுத்தும் வகையில் எல் வடிவில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாலம் இருவழித்தடம் அகலம் கொண்டதாகவும், ஒரு வழி வாகனப் போக்குவரத்து கொண்டதாகவும், 652 மீ. நீளம் கொண்டதாகவும், ரூ.61 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிவுற்ற நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் வரும் 16-ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளாா் என அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.
ஆய்வின்போது, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசுச் செயலா் ரா.செல்வராஜ், நெடுஞ்சாலைத் துறை திட்ட இயக்குநா் தெ.பாஸ்கர பாண்டியன், தலைமைப் பொறியாளா் (மெட்ரோ) எஸ்.ஜவஹா், சிறப்பு அலுவலா் (தொழில்நுட்பம்) ரா.சந்திரசேகா், கண்காணிப்புப் பொறியாளா், கோட்டப் பொறியாளா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

