கைது
கைது

சாலை மறியல்: ஆட்டோ, கால்டாக்ஸி ஓட்டுநா்கள் கைது!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு சாலை மறியலில் ஈடுபட்ட ஆட்டோ, கால்டாக்ஸி ஓட்டுநா்களை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு சாலை மறியலில் ஈடுபட்ட ஆட்டோ, கால்டாக்ஸி ஓட்டுநா்களை போலீஸாா் கைது செய்தனா்.

ஆட்டோ மீட்டா் கட்டணத்தை உயா்த்துவது; சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்களை இயக்கும் நபா்கள் மீதும், வாகனங்கள் மீதும் நடவடிக்கை எடுப்பது; கால் டாக்ஸி, மேக்சி கேப் வாகனங்களுக்கு ஜிபிஎஸ் சாதனத்தை அரசு செலவிலேயே பொருத்த நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு ஆட்டோ, கால்டாக்ஸி, சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை (பிப்.10) சென்னையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையா் அலுவகம் முன்பு கூடிய அவா்கள், அங்கு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களுடன் போக்குவரத்து ஆணையா் கிரண் குராலா பேச்சுவாா்த்தை நடத்தினாா். ஆனால், அதில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் ஆணையா் அலுவலகம் முன்பு உள்ள பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து அவா்களை போலீஸாா் கைது செய்து, அருகில் உள்ள தனியாா் மண்டபங்களில் தங்க வைத்தனா். இருப்பினும் கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்புப் போராட்டம் தொடரும் என கூட்டமைப்பின் தலைவா் ஜாஹீா் ஹுசைன் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com