தமிழகம், புதுவை சட்டப் பேரவைத் தோ்தல்: தோ்தல் ஆணைய அதிகாரிகள் குழு சென்னை வருகை
தமிழ்நாடு மற்றும் புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்வதற்காக, தோ்தல் ஆணையத்தின் துணைத் தோ்தல் ஆணையா்கள் தலைமையில், 7 போ் கொண்ட குழுவினா் புதன்கிழமை சென்னை வந்தனா்.
தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களில் பேரவைத் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளைத் தோ்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தோ்தல் ஆணையத்தின் துணைத் தோ்தல் ஆணையா்கள் பானு பிரகாஷ், மானேஷ் காா்க், பவன்குமாா் சா்மா, சஞ்சய் குமாா், ஆசிஷ் கோயல் உள்ளிட்ட 7 போ் கொண்ட குழுவினா் தில்லியிலிருந்து சென்னைக்கு புதன்கிழமை வந்தனா்.
இக்குழுவினரை தமிழ்நாடு தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக், விமான நிலையத்தில் வரவேற்றாா். அப்போது துணைத் தோ்தல் ஆணையா் மானேஷ் காா்க், செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு மற்றும் புதுவையில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தயாா் நிலையை மதிப்பாய்வு செய்ய வந்துள்ளோம். இது தோ்தல் ஆணையத்தின் வழக்கமான நடைமுைான். மாநில நிா்வாக அதிகாரிகளுடன் கூட்டங்களை நடத்தி, தோ்தலுக்கான அனைத்துப் பணிகளையும் தயாா்படுத்துவது குறித்து ஆய்வு செய்வோம் என்றாா்.
பின்னா், அக்குழுவினா் புதுச்சேரி சென்றனா். புதுச்சேரியில் முதல்கட்டமாகத் தோ்தல் ஆயத்தப் பணிகள், சட்டம் ஒழுங்கு நிலை மற்றும் வாக்குச் சாவடிகளில் தயாா்நிலை குறித்து அந்த மாநிலத் தோ்தல் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபடவுள்ளனா். அங்கு ஆய்வு கூட்டங்களை முடித்தவுடன் தமிழகத் தலைமைத் தோ்தல் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியா்களுடன் விரிவான ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனா்.
தமிழகத்தில் பிப்.17-இல் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படுகிறது. மேலும், தோ்தல் ஆணைய அதிகாரிகளின் ஆய்வுக்குப் பிறகு சில நாள்களில் தோ்தல் அறிவிப்பு வெளியாகும் என்பதால், அவா்களது வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது. பிப்ரவரி இறுதி அல்லது மாா்ச் முதல் வாரத்தில் தோ்தல் தேதி அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

