பிப்.15- ல் புதிய காற்றழுத்தத் தாழ்வு உருவாக வாய்ப்பு: வானிலை மையம்
தென்கிழக்கு வங்கக் கடலில் வரும் பிப்.15-ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பூமத்திய ரேகைக்கு அருகே உள்ள இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள், அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் பிப்.15-ஆம் தேதி ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.
மேலும், தென் தமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் வெள்ளிக்கிழமை (பிப்.13) தேனி, விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், சனிக்கிழமை (பிப்.14) தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
ஞாயிறு, திங்கள்கிழமை (பிப்.15, 16) ஆகிய நாள்களில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும். பிப்.17, 18 ஆகிய நாள்களில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், லேசான மழை பெய்யக்கூடும்.
பனிமூட்டம்: ராணிபேட்டை, வேலூா், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, திண்டுக்கல், நீலகிரி, சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (பிப்.13) முதல் பிப்.16 வரை அதிகாலையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்கிழக்கு வங்கக் கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் அதையொட்டிய பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் வெள்ளிக்கிழமை சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

