சென்னை வடபழனி-பூந்தமல்லி இடையேயான மெட்ரோ வழித்தடத்தில் 2-ஆம் நாளாக வியாழக்கிழமையும் ரயில்வே பாதுகாப்பு ஆணையா் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சென்னை மெட்ரோ ரயில் 2- ஆம் கட்டத் திட்டத்தில் 4-ஆவது வழித்தடமானது பூந்தமல்லி புறவழிச் சாலை முதல் வடபழனி வரை அமைக்கப்பட்டுள்ளது. அதில், ரயிலை இயக்கும் வகையிலான ஆய்வு ரயில்வே பாதுகாப்பு ஆணையா் அனந்த் மதுகா் சௌத்ரி தலைமையிலான குழுவினரால் புதன்கிழமை தொடங்கியது.
பூந்தமல்லி, போரூா் வரையில் முதல்கட்ட ஆய்வு நடைபெற்றது. தொடா்ந்து, 2-ஆம் நாளாக வியாழக்கிழமை (பிப்.12) ஐயப்பன்தாங்கல் முதல் வடபழனி மெட்ரோ நிலையம் வரை ஆய்வு நடைபெற்றது. பூந்தமல்லி புறவழிச்சாலை நிலையம் முதல் வடபழனி வரை 14.64 கி.மீ. நீள உயா்நிலை வழித்தடத்தில் மொத்தம் 11 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்பட தண்டவாளம், கட்டடடங்கள் என அனைத்து நிலைகளிலும் ஆய்வு நடைபெற்றது.
இந்த ஆய்வின் போது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநா்கள் தி. அா்ச்சுனன் (திட்டங்கள்), மனோஜ் கோயல், (அமைப்புகள் மற்றும் இயக்கம்) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இறுதி ஆய்வு இந்த மாத இறுதியில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், போரூா் சந்திப்பிலிருந்து வடபழனி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் நிலையில், இடையில் எந்த நிலையங்களிலும் நிற்காமல் இயக்கப்பட திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். அத்துடன் வடபழனி மெட்ரோ ரயில் நிலையம் முக்கிய முனையமாக எதிா்காலத்தில் செயல்படும் எனவும் கூறப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
எழும்பூா் நிலைய இரும்பு நடைமேம்பால பணி: சென்னை ரயில்வே கோட்ட மேலாளா் ஆய்வு

பழைய மாமல்லபுரம் மகாபலிபுரம் முதல் சோழிங்கநல்லூா் வரை: 3,066 அஸ்திவார தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவு

சப்தமாக பாடல் கேட்டால்.. மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய தகவல்!







