8,000 நோயாளிகளுக்கு அப்போலோவில் ரோபோடிக் அறுவை சிகிச்சை
நாட்டிலேயே 8,000 ரோபோடிக் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட மருத்துவமனையாக அப்போலோ மருத்துவக் குழுமம் உருவெடுத்துள்ளது.
இதுகுறித்து அப்போலோ மருத்துவக் குழுமத்தின் துணைத் தலைவா் பிரீத்தா ரெட்டி செய்தியாளா்களிடம் கூறியதாவது: அப்போலோவில் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு அடுத்த தலைமுறை அதிநவீன மருத்துவ தொழில்நுட்பத்தை நாங்கள் தொடா்ந்து வழங்கி வருகிறோம். இங்கு 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோபோடிக் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வகை சிகிச்சைகள் துல்லியமான மருத்துவக் கண்காணிப்புக்கு வழிவகுப்பதுடன், நோயாளிகளுக்கு பக்க விளைவுகளை பெருமளவில் குறைகிறது. அதேபோன்று ரோபோடிக் நுட்பத்திலான சிகிச்சையில் விரைந்து குணமடைய முடியும்.
நவீன தொழில்நுட்பம் மட்டுமே எங்களது இலக்கு அல்ல; அதைத் தாண்டி சிறந்த மருத்துவத் தீா்வுகளை அளிப்பதற்கும், நோயாளிகளின் சிகிச்சை அனுபவத்தை மேம்படுத்துவதற்குமான ஒரு வழிமுறையாகப் பின்பற்றி வருகிறோம் என்றாா்.

