சென்னையில் ஆராய்ச்சி மையம் அமைக்க ரூ. 3,510 கோடி முதலீடு
சென்னையில் ரூ.3,510 கோடி முதலீட்டில் ஆராய்ச்சி, மேம்பாடு, புத்தாக்க மையம் அமைக்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை சாா்பில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமெரிக்காவை சோ்ந்த கேஎல்ஏ காா்ப்பரேஷன் நிறுவனத்தின் துணை நிறுவனமான கேஎல்ஏ இந்தியா நிறுவனம் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது.
இந்நிறுவனம், செமிகண்டக்டா் துறைக்கான தொழில்நுட்பத் தீா்வுகளை வழங்கும் உலகளாவிய முன்னணி நிறுவனம்ஆகும். இந்நிறுவனம், சிப் உற்பத்தியில் பயன்படும்ஆய்வு, அளவீடு மற்றும் தரவு பகுப்பாய்வு அமைப்புகளை உருவாக்குகிறது.
கேஎல்ஏ இந்தியா நிறுவனம் சென்னையில் 12 ஏக்கரில் அமைக்கும் வளாகத்தில், உயா் செயல்திறன், கணினி தொழில்நுட்பம், செயல்முறைகட்டுப்பாடு, பொறியியல் மென்பொருள் போன்ற துறைகளில், மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கப் பணிகளை இந்நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. இதன் மூலம்,அடுத்த 10 ஆண்டுகளில், சுமாா் 4,000 உயா்தர வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
நிகழ்ச்சியில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, தலைமைச் செயலா் நா. முருகானந்தம், துறை செயலா் வி. அருண்ராய், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் தாரேஸ் அகமது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

