13 மாவட்டங்களில் இன்று பனிமூட்டம்
தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் சனிக்கிழமை பனிமூட்டம் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், பிப்.15-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, சனிக்கிழமை (பிப். 14) முதல் பிப். 17 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும். பிப். 18, 19 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசான மழை பெய்யக்கூடும். சென்னை, புகா் பகுதிகளில் சனிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
பனிமூட்டம்: கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், நீலகிரி, சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (பிப். 14) அதிகாலையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
ஞாயிற்றுக்கிழமை (பிப். 15) சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலையில் மிதமான பனிமூட்டமும், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டமும் காணப்படும்.

