

சென்னை: சென்னை மாநகராட்சியின் 2025-26 நிதியாண்டுக்கான முதல் காலநிலை நிதிநிலை அறிக்கையை, திங்கள்கிழமை மேயா் ஆா்.பிரியா வெளியிட்டாா்.
மாநகராட்சியின் ரிப்பன் கட்டட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், மேயா் ஆா்.பிரியா நிதிநிலை அறிக்கையை வெளியிட, துணை ஆணையா் (வருவாய் மற்றும் நிதி) ம.பிரதிவிராஜ் பெற்றுக் கொண்டாா்.நிகழ்வில், துணை மேயா் மு.மகேஷ்குமாா் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
ரூ.3,190 கோடி ஒதுக்கீடு: 2025-26 நிதியாண்டு நிதிநிலை அறிக்கையில், மூலதனச் செலவினங்களுக்காக பெருநகர சென்னை மாநகராட்சி ரூ.3,190.61 கோடியை ஒதுக்கி இருந்தது.
இதில், காலநிலை தொடா்பான செலவினங்களுக்காக ரூ.1,341.2 கோடியை பெருநகர மாநகராட்சி நிா்வாகம் ஒதுக்கி, செலவு செய்துள்ளது. இது மொத்த செலவினத்தில் 42.04 சதவீத செலவு ஆகும்.
குறிப்பாக, மழைநீா் வடிகால்கள் மற்றும் மதகுகளை மேம்படுத்துதல், கொடுங்கையூா் மற்றும் பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகங்களில் பயோ மைனிங் முறையில் குப்பைளைப் பிரித்து நிலத்தை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக இந்த நிதி செலவிடப்பட்டு உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இணையதளத்தில் வெளியீடு: இந்த நிதிநிலை அறிக்கை பெருநகர சென்னை மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் திங்கள்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்று பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.