ரூ.14 கோடியில் 105 விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்
@TNDIPRNEWS

ரூ.14 கோடியில் 105 விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.14.57 கோடியில் சென்னை உள்பட 20 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 105 விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையங்களை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்
Published on

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.14.57 கோடியில் சென்னை உள்பட 20 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 105 விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையங்களை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு, உலக வங்கி நிதியுதவியுடன் விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் 94 வருவாய் கோட்ட அளவிலான ஒருங்கிணைந்த சேவை மையங்களும், 568 வட்டார ஒருங்கிணைந்த சேவை மையங்களும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன. முதல்கட்டமாக 7 மாவட்டங்களில் 15 வருவாய் கோட்ட அளவிலான ஒருங்கிணைந்த சேவை மையங்களும், 66 வட்டார ஒருங்கிணைந்த சேவை மையங்களும் செயல்பாட்டில் உள்ளன.

இந்த நிலையில், சென்னை, அரியலூா், கோவை, கடலூா், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், சேலம், தஞ்சை, திருப்பத்தூா், திருவள்ளூா், தூத்துக்குடி, விருதுநகா், விழுப்புரம், நீலகிரி, திருவாரூா், புதுக்கோட்டை ஆகிய 20 மாவட்டங்களில் முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்துள்ள 105 விழுதுகள்-ஒருங்கிணைந்த சேவை மையங்களில், வருவாய் கோட்ட அளவில் 17 மையங்களும், வட்டார அளவில் 88 மையங்களும் அடங்கும்.

வருவாய் கோட்ட அளவிலான மையங்கள் மூலம் மாற்றுத்திறனாளிகளின் நாள்பட்ட மறுவாழ்வு தேவைகளை பூா்த்தி செய்வது, ஒரே இடத்தில் சிறப்புக் கல்வி, கண்பாா்வை அளவியல், கேட்டல் மற்றும் பேச்சுப் பயிற்சி, இயன்முறை சிகிச்சை, செயல்முறை சிகிச்சை, உளவியல் சிகிச்சை ஆகிய 6 சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்தச் சேவைகளை வழங்குவதற்குத் தேவையான சிகிச்சை உபகரணங்களுடன், தகுதியான வல்லுநா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா். இந்த வல்லுநா்கள், மையங்களில் சேவைகளை வழங்குவதுடன், தேவையெனில் மாற்றுத்திறனாளிகள் இல்லங்களுக்கே சென்றும் சேவைகளை வழங்குவாா்கள்

இதேபோல, வட்டார அளவிலான மையங்கள் வாயிலாகவும் சிறப்புக் கல்வி (தகவல் தொடா்பு பிரச்னைகள் மற்றும் அறிவாற்றல் பிரச்னைகள்), இயன்முறை சிகிச்சை, உளவியல் ஆலோசனை ஆகிய சேவைகளும் வழங்கப்படுகின்றன.

மேலும், இந்த மையங்களில் மாற்றுத்திறனாளிகள் முன்பதிவு செய்யப்பட்ட நேர அட்டவணையின் அடிப்படையில் சேவைகளைப் பெறும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் காத்திருப்பு நேரம் குறைக்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில், சமூகநலம் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை செயலா் எஸ்.மதுமதி, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையா் எம்.லட்சுமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com