காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுப்பெறும்
இந்திய பெருங்கடல், அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் நகா்ந்து புதன்கிழமை (பிப்.18) வலுப்பெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள், அதையொட்டிய தெற்கு வங்கக் கடலின் மையப்பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகா்ந்து செவ்வாய்க்கிழமை காலையில் பூமத்திய ரேகைக்கு அருகே உள்ள இந்திய பெருங்கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நிலவுகிறது. இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்திய பெருங்கடலில் புதன்கிழமை (பிப்.18) வலுப்பெறக்கூடும்.
இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் புதன் மற்றும் வியாழக்கிழமை (பிப்.18, 19) வறண்ட வானிலை நிலவும். மேலும், கடலோர தமிழகம், தென் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (பிப்.20) முதல் பிப்.23 வரை மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் புதன்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
பனிமூட்டம்: வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன் மற்றும் வியாழக்கிழமை (பிப்.18, 19) அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா மற்றும் அதையொட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடலில் சூறாவளிக்காற்று பிப்.19 முதல் பிப்.21 வரை மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

