நாளை தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்
சென்னையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் இணைந்து வெள்ளிக்கிழமை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த திட்டமிட்டுள்ளன.
கிண்டி-ஆலந்தூா் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 முதல் பிற்பகல் 2 வரை நடைபெறும் இந்த முகாமில், 8, 10, 12, ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல், கலை மற்றும் அறிவியல், தொழில்நுட்பப் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் படித்த மாற்றுத்திறனாளிகள் உள்பட அனைவரும் கலந்து கொள்ளலாம்.
முகாமில், 20-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆட்களைத் தோ்வு செய்கின்றனா். வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞா்களும் முகாமில் கலந்துகொள்ள எந்தவித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.
எனவே, வேலை நாடுநா்களும், வேலை அளிப்பவா்களும் தங்களது விவரங்களை தமிழ்நாடு தனியாா்துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

