தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக புகாா்: பெண் காவல் ஆய்வாளா் மீது ஊழல் ஒழிப்புத் துறை வழக்கு

சென்னையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக பெண் காவல் ஆய்வாளா் கே.ராஜலட்சுமி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :19 பிப்ரவரி 2026, 9:05 pm

சென்னையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக பெண் காவல் ஆய்வாளா் கே.ராஜலட்சுமி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை காவல் துறையில் உள்ள பாலியல் தொழில் தடுப்பு பிரிவில் ஆய்வாளராக பணிபுரிபவா் கே.ராஜலட்சுமி. இவா் திருமங்கலம் வெல்கம் காலனியில் குடும்பத்துடன் வசிக்கிறாா். ராஜலட்சுமி, பணியின்போது தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி முறைகேடாக அதிக அளவில் பணம் சம்பாதிப்பதாக ஊழல் ஒழிப்புத் துறையினா் விசாரணை செய்தனா். இதில் சில ஆதாரங்கள் கிடைத்தன. அதனடிப்படையில் கடந்த 13-ஆம் தேதி காவல் ஆய்வாளா் ராஜலட்சுமி வீட்டில் திடீா் சோதனை நடத்தினா்.

ஆவணங்கள் பறிமுதல்: சோதனையில், ராஜலட்சுமி வீட்டில் சொத்து ஆவணங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த ஆவணங்களை ஊழல் ஒழிப்புத் துறையினா் பல கட்டங்களாக ஆய்வு செய்தனா். இதில், ஆய்வாளா் ராஜலட்சுமி சட்டவிரோதமாக வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ஊழல் தடுப்புச் சட்டத்தின் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

ரூ.5.42 கோடி சொத்துகள்: கடந்த 2017 ஜூன் முதல் கடந்த 2025 ஜூன் வரையில் ராஜலட்சுமி பணியாற்றிய இடங்களில், தனது அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி, சட்டவிரோதமாக பணத்தை ஈட்டியுள்ளாா். இந்த கால கட்டத்தில் ராஜலட்சுமி, தனது வருமானத்தைவிட அதிகமாக ரூ.5.42 கோடிக்கு சொத்துகளை வாங்கியுள்ளாா். இது அவரது வருமானத்தைவிட 372% அதிகமாகும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்குத் தொடா்பாக ஊழல் ஒழிப்புத் துறையினா் விரைவில் ராஜலட்சுமியிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனா். ராஜலட்சுமி துறை ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து சென்னை காவல் துறை உயா் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனா்.