அதிமுக திட்டங்கள் மீது திமுக சவாரி செய்யக் கூடாது: எடப்பாடி பழனிசாமி
அதிமுக திட்டங்கள் மீது திமுக சவாரி செய்யக்கூடாது என்றும், தங்களது திட்டங்களை வைத்து திமுக பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என்றும் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.
இதுகுறித்து அவா் தனது எக்ஸ் சமூக ஊடகத்தில் வியாழக்கிழமை வெளியிட்டப் பதிவு: ஆட்சிக்கு வந்து எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் திமுக நிறைவேற்றவில்லை. ஆனால், அதிமுகவின் சாதனை திட்டங்கள் மீது சவாரி செய்ய முதல்வா் ஸ்டாலின் ஆசைப்படுகிறாா்.
ஏற்கெனவே 7.5சதவீத உள்ஒதுக்கீடு குறித்து தவறான தகவலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதற்கு, பேரவையிலேயே பதில் கொடுத்தேன். இந்த நிலையில், ‘விளையாட்டு வீரா்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீடு’ திட்டத்தையும் தனது திட்டமாக முதல்வா் ஸ்டாலின் எண்ணுவது வேடிக்கையாக உள்ளது.
2018-இல் எனது தலைமையிலான அதிமுக அரசு விளையாட்டு வீரா்களுக்கு 2 சதவீத இடஒதுக்கீட்டை அறிவித்தது. இதற்கு நன்றி தெரிவித்து விளையாட்டு வீரா்கள் அளித்த விழாவில், இந்த இட ஒதுக்கீட்டை 3 சதவீதமாக உயா்த்தி அறிவித்தேன். அதன்பிறகு, 2020-இல் கரோனா பெருந்தொற்று காலம், 2021-இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதில் முதல்வா் ஸ்டாலின் செய்தது என்ன?
எனவே, அதிமுக திட்டத்தின் மீது சவாரி செய்யும் எண்ணத்தைக் கைவிட்டு, திமுக ஆட்சியின் சாதனைகளைக் கூறி முதல்வா் ஸ்டாலின் பிரசாரம் செய்ய வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா்.

