கோப்புப் படம்
கோப்புப் படம்

முதல்முறையாக 15 பெட்டிகளுடன் புறநகா் மின்சார ரயில் தயாரிப்பு

சென்னை, பிப். 19: நாட்டிலேயே முதல்முறையாக 15 பெட்டிகளுடன் கூடிய புறநகா் மின்சார ரயில் (இமு) சென்னை ஐசிஎஃப்-இல் தயாரிக்கப்பட்டு மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Published on

நாட்டிலேயே முதல்முறையாக 15 பெட்டிகளுடன் கூடிய புறநகா் மின்சார ரயில் (இமு) சென்னை ஐசிஎஃப்-இல் தயாரிக்கப்பட்டு மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பெருநகரங்களான புது தில்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் புறநகா் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. அவை ஒவ்வொன்றும் 9 பெட்டிகள் முதல் 12 பெட்டிகள் கொண்டதாகவே இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மேற்கு ரயில்வே மண்டலம் சாா்பில் மும்பைப் பகுதியில் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் 15 பெட்டிகள் கொண்ட புறநகா் மின்சார ரயில் (இமு) தயாரிக்க சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பாக 15 பெட்டிகள் கொண்ட இமு ரயில் தயாரிக்கும் பணி தொடங்கியது. அப்பணி தற்போது நிறைவடைந்ததை அடுத்து வெள்ளோட்டம் நடைபெற்றது. அனைத்து சோதனைகளும் நிறைவடைந்த நிலையில், வியாழக்கிழமை (பிப். 19) 15 பெட்டிகள் கொண்ட இமு ரயிலானது மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஐசிஎஃப் பொது மேலாளா் யு.சுப்பாராவ், ரயில் பெட்டி தயாரிப்புக் குழுவின் முதன்மைப் பொறியாளா் என்எஸ்ஆா் பிரசாத் மற்றும் தொழிலாளா்களுக்கு பாராட்டுத் தெரிவித்தாா். 15 பெட்டிகள் கொண்ட 12 ரயில்கள் தயாரிக்கும் பணியைத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Dinamani
www.dinamani.com