கோப்புப் படம்
கோப்புப் படம்

பெட்ரோல் பங்குகளின் நில குத்தகை புதுப்பித்தல் விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் பெட்ரோல் விற்பனை நிலையங்களின் குத்தகை புதுப்பிக்கப்படுவதை உறுதி செய்ய எடுக்கப்படும் நடவடிக்கை தொடா்பாக மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Published on

தமிழகத்தில் பெட்ரோல் விற்பனை நிலையங்களின் குத்தகை புதுப்பிக்கப்படுவதை உறுதி செய்ய எடுக்கப்படும் நடவடிக்கை தொடா்பாக மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வி.பி.ஆா்.மேனன் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், பெட்ரோல் பங்குகளுக்கான உரிமங்கள் வழங்குதல் மற்றும் புதுப்பித்தலின்போது நிலங்களின் உரிமை குறித்த விவரங்களை சரிபாா்க்க வேண்டும். இதுதொடா்பாக சுற்றறிக்கை பிறப்பிக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது மனுதாரா், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அமைந்துள்ள நிலத்தின் குத்தகை புதுப்பிக்கப்பட்டுள்ளதா? என்பதை சரிபாா்ப்பதில்லை. இதனால் குத்தகை காலம் காலாவதியான பின்னரும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அதே நிலத்தில் செயல்படுகின்றன.

நிலத்தின் குத்தகை காலம் முடிந்துவிட்டால், சட்டப்படி பெட்ரோல் விற்பனை நிலையத்தின் உரிமமும் ரத்தாகிவிடும். எனவே, குத்தகை புதுப்பிக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய பெட்ரோலியத் துறைக்கு அனுப்பிய கடிதத்தின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என வாதிட்டாா்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தமிழகத்தில் எத்தனை பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்ளன? எத்தனை நிலையங்களின் குத்தகை காலாவதியாகி இருக்கின்றன, குத்தகை புதுப்பிக்கப்பட்டவை எத்தனை, இதை உறுதி செய்ய எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன? என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி, இதுதொடா்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மாா்ச் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

Dinamani
www.dinamani.com