முனைவா் பட்ட சோ்க்கைக்கு ஒற்றைச் சாளர முறை : அமைச்சா் கோவி செழியன்
தமிழக உயா் கல்வித் துறையின் கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி முனைவா் பட்டங்களுக்கான மாணவா் சோ்க்கை இனி ஒற்றைச் சாளர முறையில் நடைபெறும் என உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி செழியன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக பேரவையில் அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
பெரியாா் பல்கலைக்கழகம், மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம், திருவள்ளுவா் பல்கலைக்கழகம் போன்றவற்றில் முனைவா் படிப்புக்கான சோ்க்கை ஒற்றைச் சாளர முறையில் மேற்கொள்ளப்படுகிறது. அதை உயா் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு பல்கலைக்கழகங்களிலும் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இணையவழியே ஆராய்ச்சிப் புலம், இடங்களை மாணவா்கள் தோ்வு செய்து கொள்ள முடியும். இதற்கான செயல்பாடுகளை ஒருங்கிணைந்த மென்பொருள் கட்டமைப்பு மூலம் கண்காணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

