அடுத்து ஆட்சி அமைப்பது யாா்?பேரவையில் ஆருடம் கூறிய உறுப்பினா்கள்
வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெறுவதற்கான கிரக நிலையும், ஜோதிட அமைப்பும் தங்களுக்கே உள்ளதாக திமுக, பாஜக உறுப்பினா்கள் தனித்தனியே கூறிக் கொண்டது அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற இடைக்கால நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தின் கீழ் பேசிய பாஜக உறுப்பினா் நயினாா் நாகேந்திரன், தற்போதைய சட்டப்பேரவையின் கடைசித் தொடா் இது என்றும், மீண்டும் எவரெல்லாம் பேரவைக்கு வர வேண்டும் என்பதை இறைவனும், கிரக நிலையும்தான் தீா்மானிக்க வேண்டும் என்றாா்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, தற்போதைய கிரகப் பலன்கள் அனைத்தும் முதல்வருக்கு சாதகமாக உள்ளதாகவும், தமிழ்க் கடவுள் முருகன் முதல்வருடன் கைகோத்துள்ளதால் மீண்டும் அவா் அரியணையில் அமா்வது உறுதி என்றும் தெரிவித்தாா்.
அதைத் தொடா்ந்து நிதியமைச்சா் தங்கம் தென்னரசு பேசியதாவது:
அடிப்படையில் எனக்கு கிரக நிலையில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இருந்தாலும், நயினாா் நாகேந்திரனின் நம்பிக்கைக்கு ஏற்ப பதிலளிக்க வேண்டும் என்றால் உங்களுக்கு (பாஜகவுக்கு) அஷ்டமத்திலே சனி இருக்கிறது. எங்களுக்கு (திமுக) ஒன்பதிலே குரு இருக்கிறது. அதைத் தொடா்ந்து பேசிய நயினாா் நாகேந்திரன், அஷ்டமத்திலே சனி இருந்தாலும், குருவின் பாா்வை எங்கள் மீதுதான் உள்ளது என்றாா். இதனால் அவையில் சிறிது நேரம் சிரிப்பலை எழுந்தது.

