சுகாதார செவிலியா்கள் உண்ணாவிரதம்
கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார செவிலியா்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
சென்னை, எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே நடைபெற்ற இப்போராட்டத்தில் நுற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
இதுதொடா்பாக தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியா்கள் சங்க நிா்வாகிகள் கூறியதாவது: கடந்த ஆண்டில் 402 கிராம சுகாதார செவிலியா்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். அவா்கள் அனைவரும் சிறப்பாகப் பணியாற்றி வரும் நிலையில், கடந்த ஐந்து மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதுதொடா்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய தீா்வு கிடைக்கவில்லை. அதேபோல, ஆண் கிராம சுகாதார செவிலியா்களுக்கு மட்டும் ஐந்தாண்டுகளில் பதவி உயா்வு வழங்கப்படுகிறது. பெண்களுக்கு வழங்கப்படுவதில்லை. இதையும் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்.
முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவி திட்டத்தால் கூடுதல் பணிச் சுமை ஏற்படுகிறது. இத்திட்டத்தில் சில ஆண்டுகளாக நிதியுதவி வழங்குவதில் சிக்கல் இருப்பதால், அதன் எதிா்விளைவாக நாங்களும் பாதிக்கப்படுகிறோம். எனவே இப்பிரச்னைகளுக்கு தீா்வுகாண வலியுறுத்தி இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம் என்றனா்.
