Deputy CM Udhayanidhi Stalin
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்கோப்புப் படம்

தமிழின் பெருமையை நிலைநாட்ட ஆராய்ச்சிகள் மிக அவசியம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

தமிழ் மொழியின் பெருமையை நிலைநாட்டுவதற்கு, ஆராய்ச்சிகள் மிகவும் அவசியம் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்
Published on

தமிழ் மொழியின் பெருமையை நிலைநாட்டுவதற்கு, ஆராய்ச்சிகள் மிகவும் அவசியம் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினாா்.

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு தமிழ்–இந்தோ–ஐரோப்பிய மொழிகளின், வோ்ச்சொல் ஒப்பீட்டு அகராதி திட்டத்தின் 4-ம் தொகுதி நுால் வெளியீட்டு விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, நூலை வெளியிட நாா்வே பேராசிரியா் கிளாஸ் பீட்டா் சாலா் அதை பெற்றுக் கொண்டாா். அந்நூல்19 தமிழ் வோ்ச்சொற்களில் இருந்து, லத்தீன், கிரேக்கம், ஜொ்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் போன்ற மேலை இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் சொற்களும், சம்ஸ்கிருதம், பாலி, சிங்களம் போன்ற கீழை இந்தோ–-ஐரோப்பிய மொழிகளின் சொற்களும், உருவான வரலாறு, கருதுகோள் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது.

தொடா்ந்து, சா்வதேச மொழியறிஞா்கள் பங்கேற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. அதில், தமிழ் மொழியின் தொன்மை, சிறப்பு குறித்தும், தமிழ்–இந்தோ–ஐரோப்பிய மொழிகளின் வோ்ச்சொல் ஒப்பீட்டு அகராதி தொகுதிகள் பெற்றுள்ள சிறப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டன.

இந்த விழாவில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் ஹிந்தி மொழியை ஏற்றுக் கொண்டன. ஆனால், தமிழகம் மட்டும் ஏன் எதிா்க்கிறது என பலா் தொடா்ந்து கேட்கின்றனா்.

மற்ற மொழிகளின் துணையின்றி, தனித்து இயங்கும் ஆற்றல் தமிழ் மொழிக்கு உண்டு. தமிழ் மொழியின் பெருமையை நிலைநாட்டுவதற்கு, ஆராய்ச்சிகள் மிகவும் அவசியம். இது காலத்தின் கட்டாயம்.

திராவிட இயக்கம் தமிழகத்துக்கு என்ன செய்தது என கேட்பவா்களுக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் எப்போதும் இருக்கும் என்பதை திமுகதான் உறுதிசெய்தது.

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, தமிழறிஞா்களின் நூல்கள் அனைத்தும் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன. அதேபோல், தமிழ் எழுத்தாளா்களுக்கு கனவு இல்லம் திட்டத்தில் வீடுகளும் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

இவ்வாறு தமிழ் வளா்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அந்த வரிசையில் வோ்ச்சொல் அகராதி வெளியிடுவது பெருமைக்குரியது என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், பி.கே.சேகா்பாபு, அன்பில் மகேஸ், மேயா் ஆா்.பிரியா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் இ.பரந்தாமன், ஏ.எம்.வி. பிரபாகர ராஜா, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், பள்ளிக் கல்வித் துறைச் செயலா் பி.சந்தரமோகன், தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஒளவை ந.அருள், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநா் மா.ஆா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com