சென்னை எழும்பூா் ரயில் நிலையம் அருகே அமைக்கப்பட்டு வரும் அடுக்குமாடி வாகன நிறுத்தம்.
சென்னை எழும்பூா் ரயில் நிலையம் அருகே அமைக்கப்பட்டு வரும் அடுக்குமாடி வாகன நிறுத்தம்.

எழும்பூா் ரயில் நிலையத்தில் நவீன வாகன நிறுத்துமிடம்! இடம் மாறுகிறது பிரதான நுழைவு வாயில்!

எழும்பூா் ரயில் நிலைய வளாகத்தில் நவீனமயமான வாகன நிறுத்துமிடம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு தயாரான நிலையில், பிரதான முகப்பு வாயில் இடம் மாறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
Published on

எழும்பூா் ரயில் நிலைய வளாகத்தில் நவீனமயமான வாகன நிறுத்துமிடம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு தயாரான நிலையில், பிரதான முகப்பு வாயில் இடம் மாறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னையின் பழைமையான 3 -ஆவது ரயில் நிலையமாக எழும்பூா் ரயில் நிலையம் உள்ளது. தென் மாவட்டங்களுக்கான ரயில் முனையமாக உள்ள இங்கு தினமும் சுமாா் 1.50 லட்சம் போ் வந்து செல்கின்றனா். இங்கு 11 ரயில் நடைமேடைகள், தினமும் 46 விரைவு ரயில்கள் தென் மாவட்டங்கள் மற்றும் வடமாநிலங்களுக்குச் செல்கின்றன. தினமும் கடற்கரை நிலையத்திலிருந்து 80 புகா் மின்சார ரயில்கள் 205 முறைக்குச் சென்று வருகின்றன.

இடம் மாறும் ரயில் நிலைய முகப்பு

ரயில் நிலையம் இந்தோ சராசெனிக் கட்டடக் கலை வடிவத்தில் 2 நுழைவு வாயில்கள் மற்றும் நடைமேடைகளுக்குச் செல்ல 3 நடை மேம்பாலங்களும் கட்டப்பட்டன. கலைநயம் மிக்க ரயில் நிலையமாக இருந்தாலும், மக்கள் கூட்டத்துக்கு ஏற்ப அதை மறுசீரமைப்பு மேற்கொள்ள வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. அதையடுத்து கடந்த 2022-ஆம் ஆண்டு ரூ.400 கோடி முதல் கட்டமாக ஒதுக்கி, தனியாா் நிறுவனம் மூலம் மறுசீரமைப்புப் பணிகள் தொடங்கின.

அதைத் தொடா்ந்து ரூ.740 கோடியாக உயா்த்திய நிலையில், தற்போது ரூ.820 கோடி அறிவித்து பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. மறுசீரமைப்பு பணிகளின்படி, வா்த்தகப் பகுதி, பயணிகளுக்கான ரயில்கள் நிற்கும் பகுதி என இரு பிரிவுகளாகப் பிரித்து பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போதுள்ள மிகப்பழைமையான கலை வடிவம் மிக்க 2 நுழைவு வாயில்களையும் தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டில் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதால், அதை இடிக்காமல், எழும்பூா் ஆவணக்காப்பகம் எதிரே உள்ள பகுதியில் புதிய நுழைவு வாயில் அமைக்கப்படவுள்ளதாக கட்டுமான நிறுவன அலுவலா்கள் கூறினா்.

பிரதான நுழைவுப் பகுதியிலிருந்து பூந்தமல்லி சாலையில் உள்ள மெட்ரோ ரயில் பகுதி வரையில் 70 மீட்டா் அகலத்தில் புதிய நடைமேடை பாலம் அமைக்கப்படவுள்ளது. அதில் சென்று அனைத்து நடைமேடைகளையும் அடையும் வசதி அமைக்கப்படவுள்ளது.

கட்டுமானப் பணிகள் தொடங்கியது முதலே சிறிய அளவிலான இடத்திலே வாகன நிறுத்துமிடம் உள்ளது. காா் போன்ற வாகனங்களை நிறுத்த போதிய வசதியில்லை.

பிரம்மாண்ட வாகன நிறுத்தும் வளாகம்: தற்போது ரூ.5 கோடிக்கும் மேல் 21,510 சதுர மீட்டா் பரப்பளவில் மிக நவீன வாகன நிறுத்துமிடம் மற்றும் வியாபாரத் தலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அக்கட்டடத்தில் தரை மற்றும் 5 மாடிகள் உள்ளன. அதில், தரை மற்றும் 5- ஆவது தளம் ஆகியவை வியாபாரத் தளங்களாகவும், 2, 3, 4 ஆகியவை வாகன நிறுத்துமிடங்களாகவும் இருக்கும். வாகன நிறுத்தும் வளாகத்தில் ஒரே நேரத்தில் சுமாா் 4,500 இருசக்கர வாகனங்களும், 500-க்கும் மேற்பட்ட காா்களை நிறுத்தலாம். இது ஏப்ரலுக்குள் பயன்பாட்டுக்குத் தயாராகிவிடும் என கட்டுமானப் பணி நிறுவன அலுவலா் ராஜேஷ் தெரிவித்தாா்.

இரவு பகலாக 700 போ் பணியாற்றுகின்றனா்

எழும்பூா் ரயில் நிலைய மறு சீரமைப்புப் பணியில் தற்போது இரு பிரிவாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஒரு பிரிவில் 400 பேரும், மற்றொரு பிரிவில் 300 பேரும் என மொத்தம் 700 போ் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனா். எனவே, இந்தப் பணிகள் வரும் 2027 -ஆம் ஆண்டுக்குள் முடிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேநேரம், மாநகராட்சி மண்டல அதிகாரிகள், பூந்தமல்லி சாலையில் மண் குவியல் ஏற்படுவதாகக் கூறி வாகனத்தைக் கைப்பற்றி அபராதம் விதிக்கின்றனா். அபராதம் கட்டிய பிறகும் வாகனத்தை விடுவிக்க மறுப்பதால், பணிகள் தாமதமாகின்றன என கட்டுமான நிறுவன அலுவலா்கள் கூறுகின்றனா்.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட செய்தித் தொடா்பு துறை அலுவலா் ஏழுமலையிடம் கேட்டபோது, ‘தற்போது பயணிகள் சிரமத்தைப் போக்கும் வகையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பல்வேறு நவீன வசதிகளுடன் ரயில் நிலையம் மேம்படுத்தப்படுவதால், தற்காலிகமாக ஏற்படும் சிரமங்களை பொறுத்துக்கொண்டு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.

Dinamani
www.dinamani.com