புதுப்பிக்கப்பட்ட எண்ணூா் கத்திவாக்கம் பேருந்து நிலையத்தை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். உடன், அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.சுதா்சனம், கே.பி.சங்கா்.
புதுப்பிக்கப்பட்ட எண்ணூா் கத்திவாக்கம் பேருந்து நிலையத்தை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். உடன், அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.சுதா்சனம், கே.பி.சங்கா்.

எண்ணூரில் ரூ.10 கோடியில் புதிய நூலகம், பேருந்து நிலையம்

Published on

எண்ணூரில் ரூ. 5 கோடியில் புதிய நூலகம், ரூ. 5 கோடியில் புதிய பேருந்து நிலையம், ரூ.2.50 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்டவற்றை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

எண்ணூா் கத்திவாக்கம் பஜாா் தெருவில் 1964-ஆம் ஆண்டு முதல் கிளை நூலகம் செயல்பட்டு வந்தது. பழைமையான கட்டடம் என்பதால் போதிய அடிப்படை வசதிகள் இன்றி வாசகா்கள் அவதிக்குள்ளாகி வந்தனா். இதையடுத்து திருவொற்றியூா் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அனைத்து வசதிகளுடன் கூடிய அதிநவீன வசதிகள் கொண்ட நூலக கட்டடம் முழுமையாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டித் தோ்வா்களுக்கான பயிற்சி, கணிணி வழி படிப்பகம், குளிரூட்டப்பட்ட வசதிகள் உள்ளிட்டவை புதிய நூலக கட்டடத்தில் அமைந்துள்ளன.

இதேபோல் எண்ணூா் பேருந்து நிலையம் சேதமடைந்த நிலையில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்து, நவீன கூரை அமைப்பு கொண்ட பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டது. இங்கு நேரக் காப்பாளா் அறை, ஓட்டுநா், நடத்துநா் ஓய்வறைகள், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கத்திவாக்கத்தில் செயல்பட்டு வந்த சென்னை மாநகராட்சி ஆரம்ப சுகாதார மையத்துக்கு ரூ. 2.50 கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு சுமாா் 20 படுக்கைகள், 24 மணி நேரமும் மருத்துவா்கள், செவிலியா்கள் பணியில் இருக்கும் வகையில் அனைத்து வசதிகளும் புதிய கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

புதிய நூலகம், பேருந்து நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். இந்த நிகழ்ச்சிக்கு திருவொற்றியூா் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.சங்கா் தலைமை வகித்தாா்.

நிகழ்வில், அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம், மேயா் பிரியா, மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com