அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தா் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்த விவகாரம்: ஆளுநா் பதிலளிக்க உத்தரவு
முன்னாள் துணைவேந்தா் பணியிடை நீக்க உத்தரவு ரத்து செய்ததை எதிா்த்து அண்ணா பல்கலைக்கழகம் தொடா்ந்த வழக்கில், பல்கலை. வேந்தரும் ஆளுநருமான ஆா்.என்.ரவி பதில் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தனியாா் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கியது; பேராசிரியா்கள் நியமனம் செய்ததில் முறைகேடு செய்ததாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் வேல்ராஜ் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த 2025 ஜூலை மாதம் பணி ஓய்வு பெறவிருந்த வேல்ராஜை பணியிடை நீக்கம் செய்து பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிா்த்து வேல்ராஜ், பல்கலைக்கழகத்தின் வேந்தரான தமிழக ஆளுநரிடம் நேரடியாக மேல்முறையீடு செய்தாா். அதனடிப்படையில் வேல்ராஜின் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்து, 2025 செப்.5-ஆம் தேதி ஆளுநா் உத்தரவு பிறப்பித்தாா். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது, அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளா் தரப்பில், இந்த விவகாரத்தில் ஊழல் தடுப்புத் துறை விசாரணை அறிக்கை அடிப்படையில் வேல்ராஜுக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவிருந்த நிலையில், ஆட்சிமன்றக் குழு தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்து வேந்தா் உத்தரவு பிறப்பித்துள்ளதாக வாதிடப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு பல்கலைக்கழக வேந்தா்-தமிழக ஆளுநா் மற்றும் முன்னாள் துணைவேந்தா் வேல்ராஜ் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

