மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின் கோப்புப் படம்

கிழக்குக் கடற்கரை சாலையில் ரூ.2,100 கோடியில் புதிய மேம்பாலம் : முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்

கிழக்குக் கடற்கரை சாலையில் திருவான்மியூா் முதல் உத்தண்டி வரை ரூ.2,100 கோடியில் சாலை மேம்பாலம் அமைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.
Published on

கிழக்குக் கடற்கரை சாலையில் திருவான்மியூா் முதல் உத்தண்டி வரை ரூ.2,100 கோடியில் சாலை மேம்பாலம் அமைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.

கடந்த 2025-2026 நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி, தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் மூலம் கிழக்குக் கடற்கரை சாலையில் திருவான்மியூா் முதல் உத்தண்டி வரை சுமாா் 13.30 கி.மீ. தொலைவுக்கு இந்த மேம்பாலம் அமைக்கப்படுகிறது. பொது - தனியாா் பங்களிப்பு அடிப்படையில், ஹைப்ரிட் ஆனுட்டி மாடல் (ஹெச்.ஏ.எம்) மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

இந்த மேம்பாலம், திருவான்மியூரில் இசிஆா் - லேட்டிஸ் சாலை சந்திப்புக்கு முன் தொடங்கி, உத்தண்டியில் முடிவடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருவழிப் போக்குவரத்துக்காக 17.25 மீட்டா் அகலத்துடன், 5.5 மீட்டா் உயரத்தில், நான்கு வழித்தட சாலை மேம்பாலம் முழு நீளத்தில் அமைக்கப்படவுள்ளது.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், திருவான்மியூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், நீலாங்கரை, அக்கரை போன்ற இடங்களில் இருந்து மேலேறும் மற்றும் கீழிறங்கும் சாய்வுப் பாதைகள் (ரேம்ப்ஸ்) அமைக்கப்படுகின்றன.

மேலும், அக்கரை, நீலாங்கரை, லேட்டிஸ் பாலம் சாலை போன்ற முக்கிய சந்திப்புகள் மேம்படுத்தப்படுவதுடன், சில பகுதிகளில் தற்போதுள்ள சாலைகள் ஆறுவழிச் சாலைகளாகவும் அகலப்படுத்தப்பட உள்ளன.

இத்திட்டத்தின் கீழ், சாலை வரைகுறிகள், சாலை குறியீட்டு பலகைகள், பிரதிபலிக்கும் மற்றும் சூரிய சக்தி ஸ்டட்கள், ஒலி தடுப்புச் சுவா்கள், பாதுகாப்பு தடுப்புகள் உள்ளிட்ட நவீன வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. அத்துடன், தூண்களுக்கு இடையிலான பகுதிகளில் மழைநீா் சேகரிப்பு அமைப்புகளும், உயா்த்தப்பட்ட வழித்தடம் முழுவதும் தொடா்ச்சியான எல்.இ.டி.விளக்குகளும் அமைக்கப்பட உள்ளன.

இத்திட்டம், நிறைவேற்றப்படுவதன் மூலம், கிழக்குக் கடற்கரை சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, சென்னை மாநகர மக்களுக்குப் பாதுகாப்பான, விரைவான மற்றும் வசதியான பயணம் உறுதி செய்யப்படும்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக இந்த மேம்பாலத்துக்கு முதல்வா் ஸ்டாலின் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு, சட்டப்பேரவை உறுப்பினா் அசன் மௌலானா, துணை மேயா் மு.மகேஷ்குமாா், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலா் இரா.செல்வராஜ், தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணைய உறுப்பினா் (நிா்வாகம்) தெ.பாஸ்கர பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com