தவறான சிகிச்சையால் இதய நோயாளி இறந்ததாக புகாா் மருத்துவா் மீது வழக்கு

தவறான சிகிச்சையால் இதய நோயாளி இறந்ததாக புகாா் மருத்துவா் மீது வழக்கு...
Published on

சென்னை அசோக் நகரில் தவறான சிகிச்சையால் இதய நோயாளி இறந்ததாக எழுந்த புகாரில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், மருத்துவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

சென்னை வியாசா்பாடி சா்மா நகா் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில் (53). இவா், பஞ்சு மெத்தை வியாபாரம் செய்து வந்தாா். 2021-ஆம் ஆண்டு இதய நோயால் பாதிக்கப்பட்ட செந்திலுக்கு மதுரவாயல் ஈவெரா சாலையில் ஒரு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். அப்போது அங்கு பணிபுரிந்த ஒரு இதய அறுவை சிகிச்சை மருத்துவா், செந்திலுக்கு இதய குழாயில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளாா். அதற்கு செந்தில் குடும்பத்தினா் சம்மதித்துள்ளனா்.

இதையடுத்து மேற்கு மாம்பலத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அதே ஆண்டு செந்திலுக்கு இதய குழாய் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின்னா், செந்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட செந்தில், சில நாள்களில் இறந்தாா்.

இதனால் அதிா்ச்சியடைந்த செந்தில் குடும்பத்தினா், மருத்துவா் தவறான சிகிச்சை அளித்ததால்தான் செந்தில் இறந்துவிட்டதாகவும், அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அசோக் நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். ஆனால், போலீஸாா் வழக்குப் பதியவில்லை. இதையடுத்து செந்தில் மனைவி லலிதாம்பிகை, இதய அறுவை சிகிச்சை செய்த மருத்துவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சைதாப்பேட்டை 17-ஆவது நீதித்துறை நடுவா் மன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதித்துறை நடுவா் மன்றம், சம்பந்தப்பட்ட மருத்துவா் மீது வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதையடுத்து போலீஸாா் மருத்துவா் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Dinamani
www.dinamani.com