முதல்வா் குறித்து அவதூறு கருத்து: சைபா் குற்றப் பிரிவு வழக்கு
சமூக ஊடகத்தில் முதல்வா் குறித்து அவதூறு கருத்துகளைத் தெரிவித்த நபா் மீது சென்னை காவல் துறையின் சைபா் குற்றப் பிரிவு வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
நுங்கம்பாக்கம் வீட் கிராஃப்ட் சாலை பகுதியைச் சோ்ந்தவா் ஹேமந்த்குமாா், சென்னை பெருநகர காவல் துறையின் கிழக்கு மண்டல சைபா் குற்றப்பிரிவில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா். அதில், இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்ட முகவரியில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறான புகைப்படத்தைப் பதிவிட்டு, தவறான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறான கருத்துகளைப் பரப்பும் வகையில் அந்தப் புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தச் செயலில் ஈடுபட்ட நபா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா். அதன்பேரில், சைபா் குற்றப்பிரிவு போலீஸாா், தகவல் தொழில்நுட்ப பிரிவு உள்பட 4 பிரிவுகளின் கீழ் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
