சென்ட்ரல் புறநகா் மின்சார ரயில் பிரிவுக்கு சுரங்கப் பாதை அமைக்க ட்ரோன் ஆய்வு
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் புறநகா் மின்சார ரயில் பிரிவுக்கு சுரங்கப்பாதை அமைப்பதற்கான ட்ரோன் ஆய்வு புதன்கிழமை நடைபெற்றது.
சென்னை சென்ட்ரல் டாக்டா் எம்.ஜி.ஆா். ரயில் நிலையத்துக்கு தினமும் சுமாா் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வந்து செல்கின்றனா். அங்கிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விரைவு ரயில்களும், 500-க்கும் மேற்பட்ட புறநகா் மின்சார ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. புறநகா் மின்சார ரயில்கள் இயக்கும் பகுதியில்தான் விரைவு மற்றும் அனைத்து ரயில்களுக்கான பயண டிக்கெட் பெறும் பகுதிகள் உள்ளன. அத்துடன், விரைவு ரயிலுக்கு வருவோா், வாகன நிறுத்தம் என அனைத்து பயணிகளுக்கான இடமாகவும் புகா் மின்சார ரயில் பகுதி அமைந்துள்ளது.
சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்துக்குச் செல்வோா் பெரும்பாலும் புகா் மின்சார ரயில் பயணிகளாகவே உள்ளனா். அதனால், விரைவு ரயிலுக்கு காா் உள்ளிட்ட வாகனங்களில் வருவோா் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். எனவே, காா்கள், இருசக்கர வாகனங்கள், முக்கிய பிரமுகா்கள் விரைவு ரயிலுக்குச் செல்லும் வகையில் ரயில்வே பாதுகாப்புப் படையின் சாா்பில் தடுப்புகள் அமைத்து தனித்தனி வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும், கூட்ட நெரிசலுக்கு நிரந்தரத் தீா்வு காணவேண்டும் என ரயில்வே பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரயில்வே துறையின் ஒரு பிரிவான ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை பிரிவு (ஆா்ஐடிஇஎஸ்) குழுவினா் சென்ட்ரல் ரயில் நிலைய புகா் மின்சாரப் பிரிவுப் பகுதியை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது புகா் மின்சார ரயில் பிரிவு கட்டடத்தின் முன்பிருந்து தற்போது மெட்ரோ நிலையம் வரையில் சுரங்கப்பாதை அமைக்க ஆலோசிக்கப்பட்டது.
சென்ட்ரல் மின்சார ரயில் பகுதியை மெட்ரோ சுரங்கப்பாதையுடன் இணைக்கும் திட்ட பரிசீலனைப்படி புதன்கிழமை காலை ட்ரோன் மூலம் ஆா்ஐடிஇஎஸ் பிரிவினா் ஆய்வு மேற்கொண்டனா்.
