சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். 108 வைணவத் திருத்தலங்களில் 63-வது திருத்தலமாக சிறப்பு பெற்ற மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை பிரம்மோற்சவத்தின் 7-வது நாளான திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. தலசயன பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி உற்சவரின் அலங்கார திருக்கோலத்தில் தேரோட்டம் நடந்தது.
முன்னதாக 4 மாட வீதிகளில் தேர் சென்றபோது திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். மேலும் அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கற்பூர தீபம் ஏற்றி தேங்காய் உடைத்து சாமி தரிசனம் செய்தனர்.
வழிநெடுகிலும் பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர், குளிர்பானம் வழங்கப்பட்டது. 4 மணி நேரத்துக்குப் பிறகு தேர் நிலைக்கு வந்து சேர்ந்தது. தேரோட்ட நிகழ்ச்சியில், பேரூராட்சித் தலைவர் எம்.கோதண்டபாணி, பேரூராட்சி துணைத் தலைவர் பொ.தேவேந்திரன், தெப்ப உற்சவ கமிட்டி தலைவர் என்.ஜனார்த்தனம், கவுன்சிலர்கள் ரபா.ராஜசேகர், பெ.பூங்குழலி, எம்.ஜி.மனோகரன், முன்னாள் கவுன்சிலர் கணபதி, வடகடம்பாடி ஊராட்சி முன்னாள் தலைவர் ஜி.ஏ.சபாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி க.வஜ்ஜிரவேலு மற்றும் விழாக் குழுவினர்
செய்தனர்.