பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூரில் கல்குட்டையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் இருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்து சங்கர் நகர் போலீஸார் கூறியது:
பொழிச்சலூர், மேட்டுத் தெருவைச் சேர்ந்த முரளி மகன் ஆனந்த் (13), பண்ருட்டியைச் சேர்ந்த வசந்த் (13) ஆகிய இருவரும், பொழிச்சலூர் அரசு பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தனர்.
இருவரும் நண்பர்களுடன் பொழிச்சலூர் பொன்னியம்மன் நகரில் உள்ள கல்குவாரி குட்டையில் குளிக்கச் சென்றனர். கரையோரமாகக் குளித்துக் கொண்டு இருந்த இருவரும் உற்சாகத்தில் ஆழமான பகுதிக்குச் சென்றபோது, திடீரென தண்ணீரில் மூழ்கினர். தகவல் அறிந்து விரைந்து வந்த தாம்பரம் தீயணைப்புப் படையினர் குட்டையில் மூழ்கிய மாணவர்களின் உடல்களைத் தேடி வருகின்றனர். இதுதொடர்பாக, சங்கர் நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.