காங்கிரஸ் கட்சியில் பதவி நீக்கப்பட்டதைக் கண்டித்து மாநிலம் முழுவதிலுமிருந்து முன்னாள் மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான காங்கிரஸார் ஸ்ரீபெரும்புதூரில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் கடந்த சில வருடங்களாக மாவட்ட தலைவர்களாகச் செயல்பட்டு வந்த பலர் அண்மையில் நீக்கப்பட்டனர்.
இதையடுத்து புதிய மாவட்ட தலைவர்களை அக்கட்சியின் மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர் நியமனம் செய்தார்.
இதனைக் கண்டித்தும், தாங்கள் நீக்கப்பட்டதற்கு நியாயம் கேட்டும் முன்னாள் மாவட்டத் தலைவர்கள், அவர்களின் ஆதரவாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப் போராட்டத்துக்கு காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் சிவராமன் தலைமை வகித்தார்.
இந்த உண்ணாவிரதத்தில், விருதுநகர் மாவட்ட முன்னாள் தலைவர் கணேசன், திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் வசந்தராஜ், கரூர் பேங்க் சுப்பிரமணி, சேலம் மேகநாதன், திருச்சி ஜெராம், விழுப்புரம் வடக்கு-தெற்கு மாவட்டம் தனபால், குலாம் மொய்தீன், கன்னியாகுமரி அசோகன் சாலமன், வேலூர் மேற்கு மாவட்டம் பாலவரதன், ஈரோடு சரவணன், ராஜேந்திரன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் நல்லுச்சாமி, ஈரோடு மாவட்ட துணைத் தலைவர் பாலசுப்பிரமணி, தூத்துக்குடி ராஜாராம், முன்னாள் எம்எல்ஏ ஆரணி டி.பி.ஜே. ராஜாபாபு, தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சிவசுப்பிரமணி மற்றும் இவர்களது ஆதரவாளர்கள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகத்தைக் கண்டித்து முழக்கமிட்ட இவர்கள், மாலை 5 மணியளவில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டனர்.