தமிழகத்தில் இலவச திட்டங்களால் 130 சதவீதம் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட பாமக சார்பில் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:
ஆர்.கே.நகர் தொகுதி 3 முதல்வர்களைப் பார்த்துள்ளது. அங்கு 10 மாதங்களுக்கு ஒரு தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. திறமையற்ற நிர்வாகத்தால் தமிழகம் தற்போது திவாலாகும் நிலையில் உள்ளது.
தமிழகத்துக்கு நேரடியாக ரூ. 3.14 லட்சம் கோடியும், பொதுத் துறை நிறுவனங்களுக்கு ரூ. 5.75 லட்சம் கோடியும் கடன் உள்ளது. இதனால், தமிழக மக்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 79,861 கடன் உள்ளது.
தமிழகத்துக்கு வரும் வருவாய் அனைத்தும் இலவச திட்டங்களுக்காக செலவு செய்யப்படுகின்றன. இலவச திட்டங்களால் 130 சதவீதம் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. மக்கள் நல்வாழ்வுக்காக எந்தத் திட்டங்களும் தீட்டப்படுவதில்லை. எனவே, தமிழகத்தில் மாற்றம் வரவேண்டும் என்றார்.
கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் பெ.மகேஷ்குமார் தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் பொன்.கங்காதரன், திருக்கச்சூர் கி.ஆறுமுகம், மாநில துணைத் தலைவர் சக்தி.பெ.கமலம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.