சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்கு அக்.31 வரை விண்ணப்பிக்கலாம்
சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் மத்திய அரசால் இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி, ஜைன மதத்தைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, நிகழாண்டு 1 முதல் 10-ஆம் வகுப்பு பயில்வோருக்கு பள்ளி படிப்பு உதவித்தொகையும், 11-ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கல்வி மேற்படிப்பு உதவித் தொகையும், தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்வோருக்கு தகுதி, வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற www.scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இதற்கான, அக்டோபர் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, சிறுபான்மையின மாணவர்கள் உரிய காலத்துக்குள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.