சங்கரா பல்கலை.யில் சர்வதேச கருத்தரங்கம்
காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழகத்தில் வடமொழியில் பதிக்கப்படாத ஓலைச்சுவடிகள் தொடர்பான சர்வதேச கருத்தரங்கம் வியாழக்கிழமை நிறவடைந்தது.
சங்கரா பல்கலைக்கழகத்தின் வடமொழி பண்பாட்டுத்துறையும், புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனமும் இணைந்து கடந்த 4, 5-ஆம் தேதிகளில் இரண்டு நாள் கருத்தரங்கை நடத்தின. தொடக்க விழாவுக்கு, பல்கலை. துணை வேந்தர் விஷ்ணு போத்தி தலைமை வகித்தார். சென்னை பல்கலைக்கழக வடமொழித்துறை முன்னாள் தலைவர் வீழிநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில், பதிப்பிக்கப்படாத ஓலைச்சுவடிகள் எனும் தலைப்பில் கருத்தரங்க மலர் வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயத்தின் 25-ஆவது ஆண்டு, கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய தத்துவத் துறைகள், மொழியியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் பேராசிரியர் வீழிநாதனுக்கு 'ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி புரஸ்காரம்' எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்தியாவில் பதிக்கப்படாத பயனுள்ள பல்வேறு ஓலைச்சுவடிகளை வெளிக்கொணரும் வகையில் இந்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில், கனடா, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்தும், கேரளம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், ஒடிஸா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஆய்வறிக்கை சமர்ப்பித்தனர்.
மேலும், இதில், சங்கரா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஜி.ஸ்ரீனிவாசு, புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவன இந்தியவியல் துறைத்தலைவர் டி.கணேசன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். கருத்தரங்கை, ஆய்வு நிறைஞர்கள் கணேசன், சங்கரநாராயணன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.