செங்கை எம்ஜிஆர் மாவட்ட கூட்டுறவுத் துறை ஊழியர்கள் சிக்கன நாணய சங்கத்தின் சார்பில் நிகழாண்டில் ரூ.9 கோடிக்கு மேல் கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் கே.சேகர் தெரிவித்தார்.
இச்சங்கத்தின் பேரவைக்கூட்டம் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சி நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, சங்கத்தின் தலைவர் கே.சேகர் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜெயபாலன், இயக்குநர்கள் ரமேஷ், சம்பத், தாமோதரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
51-ஆம் ஆண்டு நிர்வாக அறிக்கையை வெளியிட்டு சங்கத் தலைவர் சேகர், பேசியதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள கூட்டுறவு சங்கங்களில் 262 பேர் கூட்டுறவுத்துறை ஊழியர்களாக உள்ளனர். நிகழாண்டு நிகர லாபம் ரூ. 21,43,940 ஆகும். உறுப்பினர்களுக்கு ரூ.9 கோடியே 58 லட்சத்து 94 ஆயிரம் கடன் வழங்கப்பட்டுள்ளது. லாபத்தின் அடிப்படையில் பங்குத் தொகை ரூ.1லட்சத்து 51 ஆயிரத்து 2 ஆயிரத்து 140 உள்ளது. இதில், உறுப்பினர்களுக்கு ஈவு தொகையாக 12 சதவீதம் வழங்கப்படும். அதுபோல், கூட்டுறவு வளர்ச்சி நிதி 3 சதவீதம், கூட்டுறவு கல்வி நிதி 2 சதவீதம், சேம நிதி 20 சதவீதம் என கணக்கிடப்பட்டுள்ளது. நிகழாண்டு போனஸ் ரூ.2400 வழங்கப்படும் என்றார்.