காங்கிரஸார் கண்டன ஆர்ப்பாட்டம்
பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா வின் நிறுவனம் பலமடங்கு ஊழல் செய்துள்ளதாகக் கூறி, அதனைக் கண்டித்தும், ஜெய் ஷாவை கைது செய்யக் கோரியும் காங்கிரஸ் கட்சியினர் மாவட்டத்தின் பல இடங்களில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் மதியழகன் தலைமை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, அமித் ஷாவின் மகன் ஜெய்ஷாவின் நிறுவனம் சில ஆண்டுகளிலேயே 16 மடங்கு லாபம் கண்டுள்ளது என ஆங்கில இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். இதில், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில்...
பாஜக தலைவர் அமித் ஷாவின் மகனை கைது செய்யக்கோரி செங்கல்பட்டில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் வழக்குரைஞர் ஆர். சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். நகரத் தலைவர் என்.கண்ணதாசன் வரவேற்றார். நிர்வாகிகள் ஆர்.குமரவேல், எம்.கே.குமரவேல், சி.கே.சிவா, தேவா, ஜே.பாஸ்கர், கூடுவாஞ்சேரி ஜக்கிரியா பாய், டி.செல்வம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வி.அண்ணாதுரை, சி.ஆர்.பெருமாள், ஜே.எஸ்.காமராஜ், கே.ஆர்.பாஸ்கர், வெங்கடேசபெருமாள் நாயுடு, திருக்கழுகுன்றம் வட்டாரத் தலைவர் பட்டிப்புலம் பன்னீர்செல்வம், மறைமலைநகர் நகர தலைவர் தனசேகர், பேச்சாளர் சம்பத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.