மதுராந்தகம் அருகே சொத்துத் தகராறில் தந்தையை அடித்துக் கொன்றதாக மகனை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள ஆனைகுன்னம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் ( 65). இவர் தனது 4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார்.
இவருக்கு முனியம்மாள், ராணி என இரு மனைவிகள் உள்ளனர்.முதல் மனைவி ராணிக்கு வாசுதேவன் (37), சஞ்சீவி (35) என இரு மகன்கள் உள்ளனர்.
இரண்டாவது மனைவி முனியம்மாளுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில், சொத்தில் தமக்குரிய பங்கை பிரித்துத் தரும்படி ராதாகிருஷ்ணனிடம் வாசுதேவன் திங்கள்கிழமை கேட்டுள்ளார்.
அதற்கு 4 ஏக்கர் நிலத்தின் மீது கடன் உள்ளதாகவும், அதனை சகோதரர்கள் இருவரும் கொடுத்துவிட்டால் சொத்தைப் பிரிக்கலாம் எனவும், ராதாகிருஷ்ணன் கூறினாராம். இதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த வாசுதேவன் அருகிலிருந்த கேஸ் சிலிண்டரை எடுத்துராதாகிருஷ்ணன் மீது அடித்ததாகக் கூறப்படுகிறது.
இதில் பலத்த காயம் அடைந்த ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த ஒரத்தி காவல் ஆய்வாளர் தமிழ்வாணன் வாசுதேவனை கைது செய்தார். மேலும் இதுகுறித்து ஒரத்தி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.