உத்தரமேரூர் ஒன்றியம், வளத்தோடு கிராமத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்பாடு குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, உத்தரமேரூர் ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் கமலக்கண்ணன் தலைமை வகித்தார்.
நீதிமொழி எரிவாயு முகமை நிறுவனத் தலைவர் தேவிகா தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார்.
இதில், சிலிண்டரை படுக்கை நிலையில் வைத்து பயன்படுத்தக் கூடாது. அடுப்பை சிலிண்டரை விட உயரமான இடத்தில் வைக்க வேண்டும். பயன்பாடு இல்லாதபோது, சிலிண்டரில் உள்ள வெள்ளைநிற மூடியால் மூடி வைக்க வேண்டும்.
கேஸ் அடுப்பு உபயோகத்தில் இல்லாதபோதும், இரவு நேரங்களிலும் ரெகுலேட்டரை அணைத்து வைக்க வேண்டும். சமைக்கும்போது அடுப்பின் அருகிலேயே இருக்க வேண்டும். சிலிண்டர் அடுப்பு உள்ள இடத்தில் விளக்கு, ஊதுபத்தி ஆகியவற்றை
வைக்கக் கூடாது, எரிவாயு கசிவு ஏற்பட்டிருந்தால் எந்த மின்சார பொத்தான்களையும் போடவோ அல்லது நிறுத்தவோ கூடாது.
அவசர தேவைக்கு எரிவாயு நிறுவன சேவையாளர்களை உடனடியாக அழைத்து சரி செய்துகொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், மருத்துவர்கள் வினோதி, அனிதா சேகர் ஆகியோர் பொதுமக்களிடையே டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, நிலவேம்புக் குடிநீர் வழங்கினர்.