காஞ்சிபுரத்தில் உள்ள செவித்திறன் குறைபாடுடையோர் பள்ளியில் காதலர் தினத்தையொட்டி இளைஞர், மாதர் சங்கத்தினர் புதன்கிழமை துப்புரவுப் பணி செய்தனர்.
காதலர் தினத்தை (பிப்ரவரி 14) ஒட்டி இந்திய ஜனநாயக வாலிபர், மாதர் சங்கத்தினர் காஞ்சிபுரத்தில் சதாவரம் பகுதியில் உள்ள செவித்திறன் குறைபாடுடையோர் பள்ளியில் துப்புரவுப் பணி மேற்கொண்டனர். பள்ளி வளாகத்தில் இருந்த செடிகள், குப்பைக்கழிவுகளை அகற்றி தூய்மை செய்தனர். பின்னர் அங்கு 15-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை செவித்திறன் குறைபாடுடைய மாணவர்களோடு சேர்ந்து நட்டனர். இதையடுத்து, தூய்மை பணி உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, மாதர் சங்க நகரச் செயலர் சௌந்தரி, வாலிபர் சங்க நகரச் செயலர் சங்கர், மாவட்ட செயலர் புருஷோத்தமன், ஜெயந்தி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.