தலையை துண்டித்து இளைஞரை கொன்ற வழக்கில் ஒருவர் கைது
மறைமலை நகரை அடுத்த காட்டுப்பாக்கம் அருகே தலையைத் துண்டித்து இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
காட்டுப்பாக்கத்தை அடுத்த கோனாதிகுப்பம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி (31) கடந்த திங்கள்கிழமை பட்டப்பகலில் தலைதுண்டித்து படுகொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கோனாதிகுப்பம் பகுதியில் இருந்து காவனூர் வழியாக காட்டுப்பாக்கம் செல்லும் வழியில் உள்ள சில வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரில் பின்பக்கம் அமர்ந்து வந்தவர் கையில் பாலிதீன் பையை மூட்டையாக எடுத்துச் சென்றது தெரிய வந்தது.
அதனடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் இருவரும் காவனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. புதுச்சேரியில் பதுங்கியிருந்த அவர்களில் ஒருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். தலைமறைவான மற்றொரு குற்றவாளியை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.