மதுராந்தகம் ரயில் நிலையத்தில் எம்எல்ஏ நெல்லிக்குப்பம் புகழேந்தி வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தார். தென்மாவட்டங்களில் இருந்தும், சென்னையில் இருந்தும் செல்லும் விரைவு ரயில்கள் மதுராந்தகம் ரயில் நிலையத்தில் நில்லாமல் செல்வது குறித்து பயணிகள் புகார் தெரிவித்தனர்.
மதுராந்தகம் ரயில் நிலையத்தில் காலை நேரத்தில் 7-க்கும் மேற்பட்ட ரயில்கள் நின்று செல்வது வழக்கம். அதனால் சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு போன்ற நகரங்களுக்கு வேலைக்கு செல்பவர்களும், கல்லூரி மாணவர்களும் எளிதில் செல்ல முடிந்தது.
ஆனால் கடந்த சில மாதங்களாக இங்கு முத்துநகர் விரைவு ரயில்,புதுச்சேரி விரைவு ரயில், அனந்தபுரி விரைவு ரயில், பாசஞ்சர் ரயில் போன்றவை நின்று செல்வதில்லை. இதுகுறித்து அறிந்த எம்எல்ஏ எஸ்.புகழேந்தி வியாழக்கிழமை காலை ரயில் நிலையத்துக்கு வந்து பயணிகளிடம் குறைகளைக் கேட்டார். பயணிகள் இங்கு இதுவரை நின்று சென்ற ரயில்கள் தொடர்ந்து நின்று செல்லவும், கூடுதல் ரயில் பெட்டிகளை இணைக்கவும் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதிலளித்த எம்எல்ஏ, வரும் 18-ஆம் தேதி காலை 10 மணிக்கு ரயில் பயணிகள் அனைவரும் வந்து தங்கள் கருத்துகளை தெரிவிக்க மதுராந்தகம் தனியார் மண்டபத்திற்கு வரும்படியும், அதன்பிறகு உங்களது கருத்துகளை திமுக எம்.பி.க்கள் மூலம் தில்லியில் ரயில்வே அமைச்சகத்துக்கு தெரிவித்து உடனடி தீர்வு காண ஏற்பாடு செய்யப்படும் என்றார்.