மதுராந்தகம் அருகே லாரிகள் மோதிக் கொண்ட விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்தார்.
திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த ஜெயசீலனின் மகன்அன்புராஜ் (41). லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவர், செவ்வாய்க்கிழமை இரவு சென்னைக்கு சேமியா உணவுப் பொருள்களை ஏற்றிக்கொண்டு, வந்து கொண்டிருந்தார்.
மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி மேலவலம்பேட்டை பகுதியில் தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி தாறுமாறாக ஓடியது.
மேலும், சாலை தடுப்புக் கம்பிகளை இடித்துக் கொண்டு, எதிர்திசை நோக்கிச் சென்றது. அப்போது சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கிச் சென்ற லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் அன்புராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். லாரியில் பயணம் செய்த கிளீனர் சரவணன் (38) பலத்த காயம் அடைந்தார். எதிர்திசையில் வந்த லாரி ஓட்டுநரும், கிளீனரும் எவ்வித பாதிப்பும் இன்றி உயிர் தப்பினர்.
தகவலறிந்து வந்த மதுராந்தகம் காவல் ஆய்வாளர் அந்தோனி ஸ்டாலின் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, காயமடைந்த சரவணனை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து மதுராந்தகம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.