மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலில் பூதத்தாழ்வார் அவதாரத் திருவிழாவில் நிறைவு விழா சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பூதத்தாழ்வாரையும், பெருமாளையும் வழிபட்டனர்.
நாட்டில் உள்ள108 வைணவ திவ்ய தேசங்களில் 63ஆவது திருத்தலமாக மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் 10 நாள் பூத்தாழ்வார் திரு அவதாரத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு இவ்விழா கடந்த 7ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.
இவ்விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 9ஆம் நாளான வியாழக்கிழமை நடைபெற்றது. தலசயனப் பெருமாளும், பூதத்தாழ்வாரும் சிறப்பு அலங்காரத்தில் தேரில் அமர்ந்து வர, கொட்டும் மழையிலும் தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது. பக்தர்கள் கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து, பெருமாளையும் பூதத்தாழ்வாரையும் தரிசனம் செய்தனர்.
விழா நாள்களில் ஒவ்வொரு நாளும் பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட வாசனை பொருள்களால் பூதத்தாழ்வாருக்கும், பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவிக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள், திருமஞ்சனம், மகாதீபாராதனை ஆகியவை நடைபெற்றன. விழாவின் நிறைவாக பூதத்தாழ்வார் மற்றும் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவிக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேகம், திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், மகாதீபாராதனை ஆகியவை நடத்தப்பட்டன. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பூதத்தாழ்வாரையும் பெருமாளையும் வழிபட்டனர்.