விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற சங்கரா பல்கலை. மாணவர்களுக்கு துணைவேந்தர் பாராட்டு தெரிவித்தார்.
சென்னையில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில், காஞ்சிபுரத்தை அடுத்த ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக மாணவர்கள் திரளானோர் கலந்துகொண்டனர். அதன்படி, கிரிக்கெட் அணி முதல் பரிசையும், வாலிபால் அணி மூன்றாம் பரிசையும் பெற்றன.
அதேபோல், வேலூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான டென்னிஸ் போட்டியில் இந்தப் பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டாமிடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சென்னை நேரு உள்
விளையாட்டரங்கில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சுகாதாரத்துறை, உயர்கல்வித்துறை அமைச்சர்கள் மாணவர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினர்.
இதையடுத்து, போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை சங்கரா பல்கலைக்கழக துணை வேந்தர் விஷ்ணுபோத்தி, பதிவாளர் சீனிவாசு, முதன்மை நிர்வாக அதிகாரி ராமச்சந்திரன், பல்கலை. உடற்கல்வி இயக்குநர் குணாளன், மாவட்ட விளையாட்டரங்கு டென்னிஸ் அகாதெமி பயிற்சியாளர் வேலு ஆகியோர் பாராட்டி, பரிசுகளை வழங்கினர்.