விநாயகர் சதுர்த்தியையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளைகடலில் கரைக்க உதவிய மீனவர்களை மாமல்லபுரம் காவல் துறையினர் புதன்கிழமை பாராட்டினர்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலூர், ஆத்தூர் திம்மாவரம், செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோயில், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, திருக்கழுகுன்றம், திருப்போரூர், மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு மாமல்லபுரம் கடலில் போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டன. உயிர்ச்சேதத்தை தவிர்க்கும் பொருட்டு விநாயகர் சிலைகளை கரைக்கவோ அல்லது கடலில் இறங்கி குளிக்கவோ யாரையும் காவல் துறையினர் அனுமதிக்கவில்லை. மாறாக கடற்கரையில் விநாயகர் சிலைகளை 10 மீட்டர் தொலைவுக்கு டிராலி மூலம் கடலுக்குள் எடுத்துச் சென்று, 500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை போலீஸார் மீனவர் உதவியுடன் கரைத்தனர்.
இதனையடுத்து, விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு முழுமையாக ஒத்துழைப்பு அளித்த மாமல்லபுரத்தைச் சேர்ந்த 25 மீனவர்களை அழைத்து சால்வை அணிவித்து, உதவித் தொகை மற்றும் பரிசுகளை மாமல்லபுரம் காவல்துறையினர் வழங்கினர்.
மாமல்லபுரம் துணைக் கண்காணிப்பாளர் சுப்புராஜ் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாமல்லபுரம் பகுதி மீனவர்கள் பலர் கலந்து கொண்டனர்.