மதுராந்தகத்தை அடுத்த கருங்குழியில் அமைந்துள்ள ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் புரட்டாசி மாத பௌர்ணமி பூஜை, சத்தியநாராயண பூஜை ஆகியவை திங்கள்கிழமை நடைபெற்றன.
ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் புரட்டாசி மாத பௌர்ணமியையொட்டி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதிகாலை மங்கல இசையுடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. ராவேந்திரர், ஆஞ்சநேயர் உள்ளிட்ட அனைத்து கடவுளர் சந்நிதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
புரட்டாசி பௌர்ணமியையொட்டி, சத்தியநாராயணர், ஆஞ்ச நேயர், ராகவேந்திரர் ஆகிய உற்சவர்களின் சிலைகள் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. பிருந்தாவனத்தின் தவயோகக் கூடத்தில் இருந்து பீடாதிபதி ரகோத்தம சுவாமி திங்கள்கிழமை நண்பகல் 12 மணிக்கு மேளதாள முழக்கம் மற்றும் பஜனை கோஷ்டியினரின் பாடல்களுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.
அங்குள்ள அனைத்து சந்நிதிகளிலும் பூஜைகள், வேள்விபூஜை ஆகியவற்றை அவர் நடத்தினார். பின்னர் பிருந்தாவனத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட சத்தியநாராயணர், ஆஞ்சநேயர், ராகவேந்திரர் ஆகிய கடவுளர் சிலைகளுக்கு பூஜை செய்து மகா கற்பூர தீபாராதனை காட்டினார். இந்த நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர்கள் தெய்வநாயகம், சுப்பிரமணி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.