வனத் துறையினரைக் கண்டித்து கோழியாளம் கிராமத்தினர் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூரை அடுத்து கோழியாளம் கிராமம் உள்ளது. அதன்படி, தீட்டாளம் முதல் கோழியாளம் கிராமம் வழியாக மதுராந்தகம் செல்வதற்கு குண்டும் குழியுமான சாலையில் பயணிக்க வேண்டியுள்ள. இச்சாலையைச் சீரமைக்க கடந்த 3 மாதங்களுக்கு முன் சாலை பெயர்த்தெடுக்கப்பட்டு, புதிய சாலை அமைக்கும் பணிகள் தொடங்கின.
இந்நிலையில், இந்தச் சாலையின் குறுக்கே வனத்துறைக்கு சொந்தமான சுமார் 1 கி.மீ. சாலை உள்ளது. இப்பகுதியில் சாலை அமைக்க வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து சாலைப் பணியினை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, 3 மாதங்களாகியும் சாலை சீரமைக்கப்படவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த கோழியாளம் கிராமத்தினர் பாப்பநல்லூர் - மதுராந்தகம் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை கோழியாளம் பகுதியில் திங்கள்கிழமை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த உத்தரமேரூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அதைத் தொடர்ந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சாலையைச் சீரமைப்பதாக போலீஸார் உறுதியளித்ததன் பேரில் பொது மக்கள் கலைந்து சென்றனர்.