ஓரிக்கையில் அமைந்துள்ள காஞ்சி மகாபெரியவர் மணிமண்டபத்துக்கு மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
காஞ்சிபுரத்தை அடுத்துள்ள ஓரிக்கையில் காஞ்சி மகா பெரியவரின் மணி மண்டபம் உள்ளது. இது கடந்த 2011-இல் கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து, இரண்டாம் கட்டமாக கருங்கற்களால் 48 அடி உயர ராஜகோபுரம் கட்டப்பட்டது. அதேபோல், 16 கருங்கல் தூண்களுடன், 47 அடி நீளம், 42 அடி அகலத்துடன் கூடிய நந்தி மண்டபம் அண்மையில் கட்டி முடிக்கப்பட்டது. இதில், சுமார் 15 அடி நீளம், 7 அடி அகலத்துடன் கூடிய சுமார் 11 அடி உயரம் கொண்ட நந்தி செதுக்கப்பட்டுள்ளது. இது ஒரே கல்லிலால் ஆனது.
நந்தி மண்டபத்துக்கும், ராஜகோபுரத்துக்கு இடையே ஒரே கருங்கல்லால் ஆன 50 அடி உயர தீப ஸ்தம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டடங்களுக்கான மஹா கும்பாபிஷேகம் சங்கர மட பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் வெள்ளிக்கிழமை காலையில் நடைபெற்றது. முன்னதாக, கும்பாபிஷேகத்தையொட்டி, யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து, ராஜ கோபுரக் கலசங்களுக்கும், நந்தி மண்டபத்துக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடத்தப்படு, தீப ஆராதனை காட்டப்பட்டது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.