கேளம்பாக்கம் அருகே மொபெட்டில் சென்ற மூதாட்டியை, பைக்கில் வந்த மர்ம நபர்கள் இடித்துத் தள்ளி அவரிடம் இருந்த 10 சவரன் நகையை பறித்துச் சென்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துகருப்பனின் மனைவி வசந்தா (60). இவர், கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். திங்கள்கிழமை இரவு 8 மணியளவில் பொருள்கள் வாங்க வசந்தா தனது உறவினர் கவிதாவுடன் கேளம்பாக்கம் நோக்கி மொபெட்டில் சென்றார். அப்போது பைக்கில் தலைக்கவசம் அணிந்து வந்த மர்ம நபர்கள் இருவர், அவர்களைப் பின்தொடர்ந்து வந்தனர் .
இதனால் அச்சமடைந்த வசந்தா மொபெட்டை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வந்தபோது மொபெட்டை மர்ம நபர்கள் இடித்துத் தள்ளியதில் வசந்தா நிலைதடுமாறி விழுந்தார். அப்போது அவரிடம் இருந்த 10 சவரன் நகையை பறித்துக் கொண்டு மர்ம நபர்கள் தப்பினர். புகாரின் பேரில், கேளம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.